சென்னை: தேமுதிக செயற்குழு, பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது எனக்காக பிரார்த்தனை செய்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 வாரமாக சிகிச்சை பெற்று நேற்று காலை வீடு திரும்பினார். இதையடுத்து,  தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று  தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காலை 8.45 மணிக்கு தொடங்கும் என  அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில், 12024 நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் கூட்டணி குறித்தும், தேமுதிக பொருளாளராக உள்ள பிரேமலதாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது குறித்தும், விஜகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. கூறப்படுகிறது.

மேலும், தற்போது தேமுதிகவில் பொருளாளராக இருக்கும் விஜகாந்தின் மனைவி பிரேமலதா கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுப்பது, மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் நடத்துவது, மாநாடு நடத்துவது குறித்து திட்டங்கள் தீட்டுவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை செய்வது, குறித்து உரையாற்றுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.