சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது இன்றியமையாத ஒன்றாகும்.  இதனால் பலர் தீக்காயம் அடைவதும் உண்டு.  இதையொட்டி தமிழக அரசு தீக்காயம் அடைந்தோருக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை செய்ய பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. 

இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்ரமணியன் தீக்காய சிறப்பு வார்டை திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர்,

”தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ விபத்து இல்லாத தீபாவளி என்கின்ற வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வுகளைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும். எதிர்பாராத தீ விபத்துகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பதற்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள் ஆகிய 95 மருத்துவமனைகளில் தீபாவளிக்காகச் சிறப்புத் தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.”

என்று கூறினார்.