சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தொடக்கக் கல்வி மட்டுமே அடிப்படை உரிமை, உயர்கல்வி இல்லை என கூறி உள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு மனுவில் அவர் ,

“தமிழகத்தில் 15 அரசு சட்டக்கல்லூரிகளும், 9 தனியார் சட்டக்கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வரும் நிலையில், புதிதாக 11 தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தனியார் சட்டக்கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும்” 

என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தபோது கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 6 வயது முதல் 14 வயது வரை தொடக்கக் கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை என்றும், உயர்கல்வி பெறுவது அடிப்படை உரிமை அல்ல என்றும் கருத்து தெரிவித்தனர்.