சென்னை: மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், நேற்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால், தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் அதிக அளவில் கூடியதால், கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது.

எனவே, விஜயகாந்த் உடலை தீவுத்திடலில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்த் உடல் தே.மு.தி.க. தலைமையகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, மதியம் 1 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் இறுதி ஊர்வலம், கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை சென்றடையும். தொடர்ந்து, மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் மறைந்த தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உடலுக்கு  மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மைத்துனர் சுதீஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம். விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து பிரதமர் மோடி மிகவும் வருத்தமடைந்தார். விஜயகாந்த் மிகவும் இளகிய மனம் கொண்டவர் என கூறினார். பிரதமர் மோடிக்கும் விஜயகாந்துக்கும் இடையே நல்லுறவு இருந்தது. 2014ல் மோடி பிரதமராக கடினமாக உழைத்தவர் விஜயகாந்த் என அண்ணாமலை கூறினார்.