சென்னை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9001 தர மேலாண்மை அமைப்பு மற்றும் ஐ.எஸ்.ஓ. 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றிற்கான சான்றிதழைப்  பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

“சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், திட்டம் கட்டம்-1-க்கு சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9001 தர மேலாண்மை அமைப்பு மற்றும் ஐ.எஸ்.ஓ.14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றிற்கான சான்றிதழை பெற்றுள்ளது.

இந்த சான்றிதழை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் அவர்களிடம் ‘புரியோ வெரிடாஸ்’ (Bureau Veritas) நிறுவனத்தின் சார்பாக அதன் மேலாளர் வின்ஸ்டன் ஐசக், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலையில் வழங்கினார். 

இது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பின் 13 துறைகளை உள்ளடக்கியது. மெட்ரோ ரெயில் செயல்பாடுகள், மெட்ரோ ரெயில், மேல்நிலை உபகரணங்கள், சிக்னலிங், தொலை தொடர்பு, கட்டுமானம், வழித்தடங்கள், மின்சாரம் மற்றும் பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் நிர்வாகம், பாதுகாப்பு, தானியங்கி கட்டண சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஆவணங்கள் மற்றும் தணிக்கை தொடர்பான பயிற்சி அளிக்க ஆலோசகரை ஏற்கனவே நியமித்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 2,361 நபர்களுக்கு ஐ.எஸ்.ஓ. விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 29 சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் ஐ.எஸ்.ஓ. அமைப்புகள் இணங்குவதை உறுதி செய்வதற்காக உள் தணிக்கையாளர்கள் மற்றும் முன்னணி தணிக்கையாளர்களாக தகுதி பெற்றுள்ளனர். 

இந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழ், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1 நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடத்தில் உள்ள உயர்நிலை மெட்ரோ ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் பணிமனைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. 

ஐ.எஸ்.ஓ. சான்றளிப்பு அமைப்பான ‘புரியோ வெரிடாஸ்’, ஆகஸ்ட் 2023 மற்றும் நவம்பர் 2023-ல் தணிக்கை ஆய்வுகளை நடத்தியது மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஓ. சான்றளிப்பை அனுமதித்துள்ளது. இந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்த உதவும். 

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி எச்.ஜெயலக்ஷ்மி, தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), கூடுதல்பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் பெ.தியாகராஜன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.