சென்னை:  பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி அறிவிப்புக்கு எதிரான வழக்கில் யுஜிசி பதில்மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பல்வேறு தேர்வுகளை தள்ளுபடி செய்து, முந்தை மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.  அதன்படி, அரியர் வைத்துள்ள மாணவர்களும், தேர்வுக்கு பணம் கட்டிய நிலையில்,  தேர்வு எழுத முடியாத சூழல் நிலவியதால், அவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. ஆனால், இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை.

 அரியர் தேர்ச்சியை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின்போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அரியர் தேர்ச்சி  என்ற தமிழகஅரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்திருந்தது. மேலும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசின் உத்தரவு ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கும் எதிரானது என கூறியது.

இந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும்,இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை.  இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாவிட்டால் அவகாசம் கோரலாம் என்றும் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இதுபோன்று தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், சென்னை பல்கலைக்கழகம்,   அரியர் மாணவர்களக்கு தேர்ச்சி அளித்து,  தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, சென்னை பல்கலை வரம்பிற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.