திருத்துறைப்பூண்டி

மிழக பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிரங்கம் ஜெயராமன் நெல் பாதுகாப்பு மையம் சார்பில் 2 நாள் நெல் திருவிழா நேற்று தொடங்கியது.  தேசிய அளவில் நடைபெற்ற இந்த நெல் திருவிழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார்.   அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம், “முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருந்தது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மை பாதுகாப்பு மண்டல குழுக் கூட்டம் நடந்தது.

அக்கூட்டத்தில் விளைநிலங்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஆகவே விளை நிலங்களைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது.   தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டு அதில், எது தேவையோ அதை அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமை படை அமைக்கப்பட்டுள்ளது.  பள்ளி மாணவர்களுக்குக் காய்கறிகள் விளைவிப்பது போன்ற வேளாண் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.