திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல ரவுடி நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொன்னேரி வேம்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹர். இவர் அந்த பகுதியில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை,  கட்டப்பஞ்சாயத்து என பல முறைகேடான செயல்களில் ஈட்டுபட்டு  வந்தார். மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  பொனினேரி பகுதியில் பிரபல ரவுடியாக இருந்து வந்தார்.

தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கஞ்சா விற்பனை உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை வேட்டையாடி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி பகுதியிலும் ஜவஹரின் கூட்டாளி ஒருவர் பிடிப்ட்டார். அவரது பெயர் கார்த்திக். இவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்து வந்ததுடன், அரசு அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு கஞ்சா சப்ளை செய்துவந்தது ஜவஹர் என்பது தெரிய வந்தது. இதனால், ஜகஹர் தலைமறைவானார். அவரை வல் துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், பொன்னேரி அருகே உள்ள வேம்பாக்கம் பள்ளம் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு கும்பல், ஜவஹரை கத்தியால் குத்தியும், வெட்டியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை நடத்தினார். முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஜவஹரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.