சென்னை

பிரபல தமிழ் திரையுலக இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த்  இன்று மாரடைப்பால் உயிர் இழந்தார்.

பிரபல தமிழ்த் திரை இயக்குநரான கேவி ஆனந்த் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ஆவார்.  இவர் இந்தி, தமிழ்,மலையாளம், தெலுங்கு என பல மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.   தமிழில் முதல்வன், செல்லமே, விரும்புகிறேன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராகி அதன் பிறகு அயன், கோ, கவண், காப்பான், மாற்றான், அநேகன் எனப் பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார்.  தற்போது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று அதிகாலை  சுமார் 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி கே வி ஆனந்த் உயிர் இழந்தார்.  தற்போது 54 வயதாகும் இவர் இதுவரை ஒரு முறை கூட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது இல்லை.  கே வி ஆனந்தின் மரண செய்தி திரையுலகை சேர்ந்தோருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கடும் சோகத்தை உண்டாக்கி இருக்கிறது.