பெங்களூரு

பைக் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகர் சஞ்சாரி விஜய் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னட திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகரான சஞ்சாரி விஜய் பல கன்னட படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆவார்.   இவர் நடித்த ரங்கப்பா ஹோபிட்னா,. தசவலா, ஹரிவு, கில்லிங் வீரப்பன், நானு அவனல்ல அவளு ஆகியவை வெற்றிப்  படங்களாகும்.  இவர் நானு அவனல்ல அவளு என்னும் படத்தில் திருநங்கையாக நடித்து தேசிய விருதை பெற்றுள்ளார்.

நேற்று சஞ்சாரி விஜய் தனது நண்பரின் வீட்டுக்குச் சென்று விட்டு தனது வீட்டுக்கு  பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.   அப்போது பைக் விபத்து ஏற்பட்டு அவருக்குத் தொடையிலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.  அவரை அருகில் இருந்தோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவமனையின் மருத்துவர் அருண் நாயக், “விஜய் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  அவரது மூளையில் இரத்தம் உறைந்துள்ளது.  அதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.  ஆயினும் இன்னும் 48 மணி நேரத்துக்கு பிறகே முடிவாக எதுவும் சொல்ல முடியும்” எனக் கூறி உள்ளார்.

அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டி அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  கன்னட திரைஉ உளில் இந்த விபத்து நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.