டில்லி

டைபெற உள்ள மக்களவை தேர்தலை ஒட்டி சமூக தளங்களில் ஏராளமான போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

போலிச் செய்திகள் சமூக தளங்கள் மூலம் பரவுவது அதிகரித்து வருகிறது. இந்த செய்தியை உருவாக்குபவர் யார் என தெரியாமலே செய்திகளை பலரும் பகிர்கின்றனர். குறிப்பாக அரசியல் கட்சிகள் பற்றிய போலிச் செய்திகள் அதிக அளவில் பரப்பப் படுகின்றன. இதனால் சற்று தீவிரமான பகுதிகளில் பல முறை அரசு இணைய சேவையை முடக்கி விடுகிறது.

தற்போது மக்களவை தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகளைப் பற்றிய தவறான செய்திகள் ஏராளமாக பரப்பப்படுகின்றன. அதில் ஒன்றாக வாட்ஸ்அப்பில் பல குழுக்களில் ஒரு செய்தி உலவியது. அந்த செய்தியின்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புல்வாமா தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப் போவதாகவும் கல்லெறி தீவிரவாதிகளை விடுதலை செய்ய உள்ளதாகவும் செய்திகள் பரப்பப்பட்டன.

இந்த செய்திகள் குறிப்பாக பாஜகவின் பல குழுக்களிலும் பரவியது. இதன் மூலம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிர்க்கட்சி ஆதரவு அளிப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க சிலர் விரும்பி உள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரஸ் கட்சியின் எந்த ஒரு தலைவரோ, தொண்டரோ இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கவில்லை. ஆயினும் இதை உண்மை என நம்பி பலரும் பரப்பி உள்ளனர்.

இது போன்ற போலிச் செய்திகள் அரசியல் கட்சிகளை மட்டுமின்றி குறிப்பிட்ட மதம் அல்லது மத தலைவர்களைப் பற்றியும் வருகின்றன. அது மட்டுமின்றி பிள்ளைகள் கடத்தல் உள்ளிட்ட செய்திகளை நம்பி கும்பல் தாக்குதலும் நடந்துள்ளதை யாரும் மறக்க முடியாது. இந்த பொய்ச் செய்திகள் அனைத்தும் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்பட்டவை ஆகும்.