சென்னை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிரமாகப் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலை, செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி 6000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பிறகு உபரிநீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டு ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் 402 கன அடியாகக் குறைக்கப்பட்டது. தற்போது இது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், பாதுகாப்பு கருதி ஏரியின் நீர் திறப்பு வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.69 அடியாக உள்ள நிலையில், ஏரிக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,000 கன அடியாக உயர்ந்துள்ளது.