டில்லி

ளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தலைமை நீதிபதி, முதல்முறை மசோதா அனுப்பும்போதே அதனைக் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்கலாமே என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுவைத்துவிட்டு, மறு நிறைவேற்றம் செய்த பின் குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார். மேலும் மசோதாக்களைச் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பாததால் அவர் தரப்பில் குழப்பம் உள்ளது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

 அரசியல் சாசன அடிப்படையில் மசோதாவைக் கிடப்பில் வைத்திருக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் சட்டத்தைச் செயலிழக்கச் செய்யவோ, முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு காணவேண்டியுள்ளது என்றும் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் தீர்வு காண்பது தொடர்பாக முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்து, அமர்ந்து பேசி தீர்வு காணவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வருகிற 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.