சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டமான இன்ற, தமிழகத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 9 மாவட்டங்களுக்கு உள்ளராட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மேலும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிவுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்றைய சட்டமன்ற கூட்டத்தில்,  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதமும், புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவி காலமும் மேலும் 6 மாதம் நீட்டிப்புக்கப்பட்டுள்ளது. தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் பேரவையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தனர். ஜூன் 30-ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தனி அலுவலர் பதவி காலம் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நாளை நிறைவேற்றப்படும்.

முன்னதாக  உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், தனி அலுவலர் பதவி காலத்தை ஆறு மாதம் நீட்டிக்க இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.