சென்னை: “டான்செட், சீட்டா (TANCET, CEETA) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டிப்பு செய்வதாக அறிவித்து உள்ளது. அதன்படி அதற்கான அவகாசம்  பிப்ரவரி 12-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் டான்செட் (TANCET) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

அதேபோல,  அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், மண்டல கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க். ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு சீட்டா (CEETA) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜனவரி 10-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 (நேற்று வரை)  மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த  நிலையில்  மாணாக்கர்களின் வேண்டுகோளை ஏற்று, மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  பிப்ரவரி 12-ம் தேதி வரை https://tancet.annauniv.edu/tancet, https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், 2024-25-ம் கல்வியாண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு, மார்ச் மாதம் 9-ம் தேதியும், சீட்டா நுழைவுத்தேர்வு மார்ச் மாதம் 10-ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.