சென்னை

சென்னையில் கடல் நீரில் கசிந்த எண்ணெய் அகற்றுதல் பற்றி வல்லுநர் குழுவுடன் தலைமைச் செயலர் ஆய்வு நடத்தி உள்ளார்.

சென்னை எர்ணாவூர் பகுதி முழுவதும் மிக்ஜம் புயல் காரணமாக மழைநீர் சூழ்ந்தது. இந்த மழைநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுத் தோல் அரிப்பு, கண் எரிச்சல், தலைச்சுற்றல் மற்றும் சுவாச பிரச்சினைகளால் அவதிப்பட்டனர். எனவே மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கசிவுக்கான ஆதாரத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசு ஒருபுறமும், இந்தியக் கடலோர காவல்படை மறுபுறமுமாகக் கடலில் எண்ணெய் கசிவு சூழ்ந்துள்ள இடங்களில் அதனை அகற்றும் பணியில் பணியில் ஈடுபட்டு வருகிறது. நேற்று இது குறித்து மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மை வல்லுநர் குழுவுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

எண்ணூர் மற்றும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் எண்ணெய் கசிவு அளவு குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கச் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

தொழில்நுட்ப குழுவின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு அகற்றும் பணியில் 20க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன.