சென்னை:  பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில்,  தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. ஞாயிறன்று, தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  ஓட்டு எண்ணிக்கை நடைெபறும் 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு அமலில் இருக்கும் என்றும்  தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் தமிழகஅரசுஅறிவித்து  உள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது,

மாநிலத்தில் கொரோனா பரவல் வேகத்தின் அடிப்படையில் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் சில நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு ஆகிய கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும்வரை அந்த கட்டுப்பாடுகள் தொடரும்.

அதன்படி, இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு இருக்கும்போது, மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை.

மருத்துவ அவசரத்திற்காகவும், விமான நிலையம், ரெயில்வே நிலையங்களில் பயணிகள் வசதிக்காகவும் ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும்.

மருந்துவமனைகள், மருந்துக் கடைகள், பால், பத்திரிகைகள் வினியோகம் மற்றும் சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ், பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகிய அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் இயங்கலாம்.

அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் இரவு ஊரடங்கில் பணியாற்றலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும்.

அதில் தளர்வுகள் கிடையாது. காலை 6 மணி முதல் 10 மணிவரை, பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை, மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை உணவு விடுதிகளில் பார்சல் உணவு பெற அனுமதி உண்டு. ஸ்விகி, சொமட்டோ போன்ற பார்சல் உணவு வினியோகம் இந்த நேரத்தில் அனுமதிக்கப்படும்.

சனிக்கிழமைகளிலும் மீன் சந்தை, மீன் கடைகள், கோழி மற்றும் பிற இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும். அனைத்து நாட்களிலும் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் வரக்கூடாது. பூங்காக்கள், மிருககாட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொழுதுபோக்கு பூங்காக்கள் 50 சதவீத அளவில் இயக்கப்படலாம். திருமணங்களில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். சினிமா, டி.வி. நாடகங்களுக்கான படப்பிடிப்புகளை நடத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.