ஈரோடு:  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை 3 சுற்று எண்ணப்பட்ட நிலையில், சுமார் 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

இதையடுத்து திமுக கூட்டணியினர்  பட்டாசு வெடித்து,. இனிப்பு வழங்கி மேளதாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 397 தபால் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திமுக அதிமுக கட்சி தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி குவிந்துள்ளனர்.