சென்னை:

 தேர்தலில் போட்டியிட கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று டிடிவி தினகரனின் கேள்விக்கு துணைமுதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரி வித்தும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றுள்ளார். இவர் அதிமுகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமமுக துணைப்பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் கடுமையாக குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? அவர்தான்  குடும்ப ஆட்சிக்கு எதிராக பேசினார். ”ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்பேன்” என்றார். இப்போதே அவர் மகன் தேர்தலில் நிற்கிறார். இதை மக்கள்தான் கேட்க வேண்டும். மக்கள் இதை பார்த்துக் கொள்வார்கள். தேனீ மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணிப்பார்கள். அவரின் குடும்பத்தையும் புறக்கணிப்பார்கள்.

இதை எல்லாம் குடும்ப ஆட்சி இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிடுவார் என்றார் அதைவிட பெரிய நகைச்சுவை வேறு கிடையாது என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஓபிஎஸ், அதிமுகவில் கட்சி அடிப்படை உறுப்பினர் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை இருக்கிறது என்றவர்,  அந்த வகையில் எனது மகனும் தேர்தலில் போட்டியிட மனு அளித்துள்ளார். இதில் தவறு ஏதும் இல்லை என்று கூறி உள்ளார்.