சென்னை:

த்தியஅரசுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டோம் என்று தமிழக  முதல்வர் எடப்பாடி பெருமிதமாக கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இன்று காலை முதல்வர்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழக அரசு  எடுத்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்  கொரோனா தொற்று பரவலின்  தீவிரம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,

தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது.

மத்திய அரசு கூறுவதற்கு முன்னதாகவே கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது.  தமிழ்நாட்டில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கை கள் ஜனவரி மாதமே தொடங்கி விட்டது. மாநில அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தலைமைச் செயளாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 3 முறை மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

நோய் தடுப்பு பணிகளுகளுக்காக 19 மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 23 ஆம் தேதி முதல் விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

7.3.2020 அன்று தமிழ்நாட்டில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

நோய் தடுப்பு பணிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 35 ஆயிரம் பிசிஆர் கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவில் உள்ளது.

நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கும் பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. முகக்கவசங்கள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன.

பரிசோதனைக்கான 68 ஆயிரம் பிசிஆர் கருவிகள் உள்ளன.

அரசு சார்பாக 17 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 10 பரிசோதனை மையங்கள் என மொத்தம் 27 பரிசோதனை மையங்கள் உள்ளன.

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தவறானது. உயிர்பலியை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான பரிசோதனை கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1, 267 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14-இல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும்.

ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர்.

தினசரி ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகள் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது.  கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. போன மாதம் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் காய்கறி கடைகள் மூலம் வீட்டிற்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள்தோறும் 4500 வாகனங்கள் மூலம் 2500 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் 138 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கி வருகிறோம். ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்  வழங்கப்படும்.

கொரோனாவை தடுப்பதில் அரசு சிறப்பாக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்க வில்லை.

தமிழகத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக திமுக எம்.பி.க்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்.

புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார். நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது.

சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும்.

தமிழகத்தில் நோய்த்தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.

ரம்ஜான் நோன்பு காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசிக்க உள்ளது. த

மிழக தலைமை காஜியுடன், தலைமைச் செயலாளர் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏப்.20-ஆம் தேதிக்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்றார்.

மாநிலத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது. நிதி வழங்கிய அனைவருக்கும் அரசு சார்பில் நன்றி .

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.