மிழகத்தில் விளையும் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களை தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. அவ்வளவு சக்தி வாய்ந்த மஞ்சளுக்கு  புவிசார் குறியீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் கோரி வந்தனர்.

இந்த நிலையில், புவிசார் குறியீட்டின் வகைப்படுத்துதல் பட்டியலில் மசாலா பிரிவில் வகுப்பு 30ன் கீழ் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மஞ்சள் அதிக அளவில்  ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்த  கொடுமுடி, சிவகிரி, பவானி, கோபிச்செட்டி பாளையம், அந்தியூர், சென்னம்பட்டி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய இடங்களிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலுமம் மஞ்சள் பயிரிப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஈரோடு பகுதியில் பயிரிடப்படும் மஞ்சளுக்கு தனித்தன்மை  உண்டு.  எனவே இந்த மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதி மஞ்சள் விவசாயிகள் கோரிக்கைவிடுத்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும்.

குறிப்பிட்ட உற்பத்தி பொருள் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டதற்கும், அதன் தரத்தை காப்பதற்குமான சான்றாகும்.

ஏற்கனவே,  மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, மகாபலிபுரம் சிற்பங்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஆரணிப்பட்டு, சேலம் பட்டு, தஞ்சாவூர் ஓவியங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.