ஈரோடு: திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 2 நாள் ஈரோடு கிழக்கு தொகுதியில்  பிரசாரம் மேற்கொள்கிறார்.

27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் போட்டியிடும், தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் முகாமிட்டு வாக்குவேட்டையாடி வருகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் அந்த தொகுதியில் வாக்குவேட்டையாடுகிறார்.

இன்று மாலை 4 மணிக்கு ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி முருகேசன் நகர் வழியாக கணபதிநகருக்கு செல்கிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார் தொடர்ந்து அம்பேத்கர் அடுக்குமாடி குடியிருப்பு, நாராயணவலசு, இடையன்காட்டுவலசு வழியாக முனிசிபல்காலனிக்கு வருகிறார். அங்கு கருணாநிதி சிலை பகுதியில்  பொதுமக்களிடையே பேசுகிறார். தொடட்ரந்து . இதையடுத்து பழனிமலை வீதி, கமலாநகர், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம், பி.பி.அக்ரஹாரம் வழியாக சென்று காந்திநகரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் 2-வது நாள் பிரசாரத்தை தொடங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதன்பிறகு ஈரோடு எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, ஆலமரத்து தெரு, மரப்பாலம், மண்டபம் வீதி, காமாட்சிகாடு அய்யனார் கோவில் வீதி, இந்திராநகர் வழியாக சென்று கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.