ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை கண்காணிக்கவும், அவற்றை தடுக்கவும் வங்கிகளுக்கு  தேர்தல் அதிகாரிகள் புது உத்தரவுகளை பிறப்பத்துள்ளனர். அதன்படி ரூ.1லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தலையொட்டி ஈரோட்டில்  மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி தலைமையில் வங்கியாளர்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதித்துடன்,  தேர்தல் நோக்கத்திற்காக வேட்பாளர்கள் வங்கி கணக்குகளை தொடங்கும் போது வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ள நேரத்தில் வழக்கத்திற்கு மாறான சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக நடைபெற்றாலோ, பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்டிஜிஎஸ் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றாலோ, வேட்பாளர்கள் அல்லது அவர்களது மனைவி அல்லது அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்திற்கு அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல் போன்ற பண பரிவர்த்தனைகள் இருந்தாலோ, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதற்கான சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டாலோ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதுபோல,  வங்கிகளால் அவுட்சோர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள் ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கு செல்லும் போது வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் எடுத்துச் செல்லவும், பணியாளர்கள் அந்தந்த ஏஜென்சிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வதுடன் பணமதிப்பு விபரங்கள் அடங்கிய தொகுப்பினையும் தேர்தல் நடைமுறை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்,  10 லட்சம் ரூபாய்க்க்கு மேலான பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும போது வருமான வரித்துறை, தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.