அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோயில், புதூர், ஈரோடு மாவட்டம்.

பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவைக் கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள். தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததைச் சிறப்பிக்கும் பொருட்டு, அப்பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், விஷ்ணு அவளைத் தன் இடது தொடை மீது அமர்த்தி, தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாகக் காட்சி அளித்தார். இக்கோயில் 16ம் நூற்றாண்டில் மைசூர் கர்த்தார் இன மன்னர்களால் கட்டப்பட்டது.

இக்கோயிலில் உள்ள காளிங்கன் என்ற ஐந்து தலை பாம்பு சிலை பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி, பாம்பு மீது கிருஷ்ணன் நாட்டியம் ஆடுவது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த சிலை இன்னும் புதிதாகக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. எதிரிகளின் தொல்லைக்கு ஆளானவர்கள் இந்த காளிங்க நர்ந்தன சிலையை வழிபட்டால் தொல்லையிலிருந்து நீங்கலாம். 

திருமால் அமர்ந்த நிலையில் உள்ள கோயில்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு. இவ்வகையில் இங்குப் பெருமாள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். பவுர்ணமி நாட்களில் சுதர்சன ஹோமம், பாக்ய சுத்தரம், நவக்கிரக ஹோமம், சந்தான மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடக்கிறது. அன்றைய தினம் மாலை பஜனை நடக்கிறது. கோயிலுக்கு முன்புறம் உள்ள ஸ்தூபியில் அனுமான், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பெருமாளைப் பார்த்தபடி காட்சி தருகின்றனர். விநாயகர், கருடன் தெற்கு நோக்கி இருப்பது சிறப்பம்சம். 

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாழன், சனி ஆகிய இரு நாட்கள் ஸ்தூபியை மூன்று முறை சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏழரை சனியில் சிக்கியுள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டுவந்தால் ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. இலட்சுமி நாராயண பெருமாளை வழிபட்டால் கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக நடந்து வரும் சண்டை சச்சரவுகள் நீங்கும். தொழிலில் தோல்வி அடைந்தவர்கள் மேன்மை அடைய வாய்ப்புள்ளது. 

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.