ரோடு

சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசிய வழக்கில் அக்டோபர் 30 அன்று ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுளளது..

கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அந்தக் கூட்டத்தில் சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமானின் பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட சமூகத்தினரையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாகப் பேசியதாகச் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகையில் கடந்த மாதம் 11-ந் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார்.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணையின் போது சீமான் தரப்பில் அவரது வழக்குரைஞர் ஆஜரானார். சீமானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால், அவரால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே வழக்கு விசாரணையை நீதிபதி முருகேசன் வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.