மதுரை: திமுக 2021 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளியிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் 19 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இது ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். “போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்”. 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம் வடமதுரை ஒன்றியத்ல் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை விடுப்பாக அனுமதிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.

இதை களையக்கோரி, பல்வேறு போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அறிக்கையில், வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்த கருத்துக்களைக் கேட்டு, அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார். ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை.

இந்த நிலையில், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள்  பிப்ரவரி மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து 19 நாட்கள் போராட்டம் நமடத்தினர்.  இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்து வந்தனர்.

இந்த போராட்டத்தின்போது, ஆசிரியர்கள், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், சொன்னதை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது திடீரென திமுக அரசு,  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்ட இருப்பது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.