சென்னை: திமுகவில் ‘சுற்றுச்சூழல் அணி’ என்ற பெயரில் புதிய அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணியின் மாநிலச் செயலாளராக, சமீபத்தில் திமுகவில் இணைந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்  கார்த்திகேய சேனாபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த அணிக்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகநல அமைப்புகள், மாவட்ட கழக செயலாளர்கள் மாபெரும் ஆதரவினை அளித்திடுக” – என  கழக தலைவர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்த நேரத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினராக இருந்த கார்த்திகேய சிவசேனாபதி, ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்க்கும் விதமாக, தன் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார்.

இவர் சமீபத்தில் திமுக தலைவர் முன்னிலையில், கழகத்தில் இணைந்தார். தற்போது அவருக்கு பதவி கொடுக்கும் வகையில், திமுகவில் ‘சுற்றுச்சூழல் அணி’ என்ற பெயரில் புதிய அணி உருவாக்கப்பட்டு, அதில் மாநில செயலாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.

கழக சட்டதிட்டத்தில் கழகத் துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதி: 31 – பிரிவு 19ன்படி; “தி.மு.க. சுற்றுச்சூழல் அணி” எனும் புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராக திரு. கார்த்திகேய சேனாபதி அவர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏனைய நிர்வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கு ஒன்று இணையாக, ஒன்றை மற்றொன்று உரசிக் கொள்ளாமல் பயணிக்க வேண்டும்’ என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

எனினும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக் கொள்கை-2020 உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகளின் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், விவசாயிகளின் வேளாண்மையைக் கெடுக்கும் செயல்பாடுகளில் மத்திய – மாநில அரசுகள் ஈடுபடுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மத்திய – மாநில அரசுகளின் சுற்றுச்சூழலுக்கு எதிரான, ஒருதலைப்பட்சமான, எதிர்காலம் குறித்த எண்ணம் சிறிதுமில்லாத நடவடிக்கைகள், மனித குலத்திற்கே சவால் விடுவதாகவும் – வேளாண் நிலங்களைப் பறிப்பதாகவும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் தமது உயிருக்கு நிகராகப் போற்றி வைத்திருக்கும் நிலங்களைச் சர்வாதிகாரமாக எடுத்துக் கொள்ளும் போக்கினை அரசுகள் கையாள்வது அதிகரித்து வருகிறது. இந்தக் கொடிய செயல், அடுத்து அடுத்துவரும் தலைமுறைக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

சுற்றுச்சூழல் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் – கார்ப்பரேட் முதலாளிகளை மட்டும் மனதில் வைத்து, கொண்டு வரப்படும் திட்டங்களால் ஏற்கனவே தமிழ்நாடு பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், தூத்துக்குடி பகுதியில் ஸ்டர்லைட் ஆலை, சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை, தமிழ்நாடு முழுவதும் எண்ணெய்க் கிணறுகள், போதாக்குறைக்கு இப்போது ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என்று சுற்றுச்சூழல், கடல்வளம், நிலவளம் ஆகியவற்றிற்கு எதிரான ஆட்சியாளர்களின் அணுகுமுறையினைத் தட்டிக் கேட்டுத் திருத்துவதற்கும் தேவைப்படும்போது போராடுவதற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு அணியை உருவாக்கிட வேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அதனடிப்படையில், கழகப் பொதுச்செயலாளர் அவர்களால், “தி.மு.க. சுற்றுச்சூழல் அணி” உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராக திரு.கார்த்திகேய சேனாபதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் – கழகத்தின் தளகர்த்தர், கொங்கு நாட்டின் தலைதாழாச் சிங்கம், தன்மான முரசு, தமிழ் இனத்துச் சுடரொளி என்றெல்லாம் பலபடப் பாராட்டப்பட்ட மறைந்த குட்டப்பாளையம் சாமிநாதன் அவர்களின் பெயரன். பல்லுயிர் மற்றும் பாரம்பரிய கால்நடைப் பாதுகாப்பிற்காகப் பாடுபட்டு வரும் இவர், “நீரின்றி அமையாது உலகு” என்று, கல்லூரி மாணவர்களிடையே மழைநீர் சேமிப்பு குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ரியோ உச்சி மாநாட்டில் நிலையான வளர்ச்சித் திட்டம் ஆகிய பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். ஆகவேதான் மிகப் பொருத்தமான இவரது பொறுப்பில், கழகத்தின் சுற்றுச்சூழல் அணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் – சுற்றுச்சூழலுக்காகப் பாடுபடும் சமூகநல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் – கழக மாவட்டச் செயலாளர்களும், தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள “சுற்றுச்சூழல் அணிக்கு” மாபெரும் ஆதரவினை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். வளர்ச்சியும் – சுற்றுச்சூழலும் இணை கோடுகளில் பயணிப்பதற்கும், மத்திய – மாநில அரசுகள் இந்த நிலைக்கு மாறாக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, அதை ஜனநாயக பூர்வமாக எதிர்த்து – அறவழியில் போராடி – மக்களின் உரிமைகளை நிலைநாட்டிடவும் இந்த அணி பாடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.