சென்னை: பழைய முறையில் 3மணி நேரம் நடைபெறும் வகையில் பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என கூறப்படுகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், வரும் ஜூன் மாதம் ஆன்லைனில் மறு தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா 2வது அலை காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டன. தேர்வு எழுதிய 4.25 லட்சம் மாணவர்களில், 2.3 லட்சம் மாணவர்களின் முடிவுகளை மட்டுமே அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டது. இதில் பல குளறுபடிகள் எழுந்தன. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா வேண்டுமென்றே தேர்வு முடிவுகளை கேள்விக்குறியதாகவும், கேலிக்குறியதாகவும் மாற்றி விட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆனால்,  முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரம் தெரிவித்தது.

இதற்கிடையில், தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றது. உடனே அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களை கூட்டத்த நடத்தி விவாதிக்கப்பட்டதுடன், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மறுதேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து,  மறு தேர்வு குறித்து விளக்க, இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களோடு அண்ணா பல்கலைகழகம் சார்பில் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 3, 5 மற்றும் 7வது செமஸ்டர் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்கள், ஆன்லைனில் நடத்தப்படும் இந்த மறு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பழைய வினாத்தாள் முறையே பின்பற்றப்படும். 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 3 மணிநேரம் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகபட்சம் 30 பக்கங்களுக்கு பதில் எழுத வேண்டும். தேர்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக அந்தந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும் என்றும் தேர்வுக்குப் பிறகு, மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத்தாள்கள் மற்றும் அசல் விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.