டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் கலால் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபானம் விற்க ஒப்பந்தம் பெற்ற வணிகர்களுக்கு தொடர்புடைய  30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து டெல்லி துணைமுதல்வர் மனிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை மற்றும் விசாரணை நடத்தியது,. இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் களமிறக்கப்பட்டு உள்ளது.  டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், பஞ்சாப் ஹரியானா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் முக்கிய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறது.

டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ, டெல்லி துணைமுதல்வர் மனிஷ் சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் வரிக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உட்பட 15 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மனிஷ் சிசோடியாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

சிபிஐ சோதனை குறித்து கருத்து தெரிவித்த கலால் வரி துறைக்கு பொறுப்பு வகிக்கும் மனிஷ் சிசோடியா, சிபிஐ சோதனையை வரவேற்பதாக தெரிவித்ததுடன், . விரைவில் உண்மை வெளிவரும் வகையில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இதுவரை என் மீது பல வழக்குகள் போடப்பட்டும் எதுவும் வெளிவரவில்லை. இதிலும் எதுவும் வராது. நாட்டில் நல்ல கல்விக்கான எனது பணியை நிறுத்த முடியாது. நம் நாட்டில் நல்ல வேலை செய்பவர்கள் இப்படி துன்புறுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதனால்தான், நம் நாடு இன்னும் நம்பர் 1 ஆகவில்லை என கூறியிருந்தார்.

சிபிஐ எஃப்.ஐ.ஆர்-இல் “மத்திய புலனாய்வுப் பணியகத்தால் 2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லியின் ஜி.என்.சி.டி.டி-யின் கலால் வரிக் கொள்கையை வடிவமைத்து செயல்படுத்துவதில் உள்ள முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் பிரவீன் குமார் ராய், உரிய அதிகாரிளுக்கு உத்தரவுகளை அனுப்பியுள்ளார்.  இத்துடன் மனிஷ் சிசோடியா, துணை முதல்வர்; ஆர்வ கோபி கிருஷ்ணா, அப்போதைய கலால் பிரிவு கமிஷனர், ஆனந்த் திவாரி, அப்போதைய கலால் பிரிவு துணை ஆணையர்; பங்கஜ் பட்நாகர், உதவி ஆணையர் (கலால்) 2021-22 ஆம் ஆண்டிற்கான கலால் வரி கொள்கை தொடர்பான முடிவுகளை, தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி, டெண்டருக்குப் பிந்தைய உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் பரிந்துரை செய்வதிலும், முடிவுகளை எடுப்பதிலும் முக்கிய பங்காற்றினார் என  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமில்லாமல், நம்பகத் தகுந்த வட்டாரங்கள் கூறியபடி, “விஜய் நாயர், பொழுதுபோக்கு மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான ஒன்லி மச் லவுடரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்று தெரியவந்துள்ளது; மனோஜ் ராய், பெர்னோட் ரிக்கார்டின் முன்னாள் ஊழியர்; பிரிண்ட்கோ ஸ்பிரிட்ஸ் உரிமையாளர் அமந்தீப் தால்; இண்டோஸ்பிரிட்டின் உரிமையாளர் சமீர் மகேந்திரு, கலால் வரி கொள்கையை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் உள்ள முறைகேடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.” என்று எஃப்.ஐ.ஆர். குற்றம் சாட்டியுள்ளது. “மேற்கூறிய உண்மைகள் முதல்கட்ட பார்வையில் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்), தனிப்பட்ட நபர்கள், மற்றும் பிற அறியப்படாத அரசு ஊழியர்கள் 120-பி, 477A IPC மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (2018 இல் திருத்தப்பட்டது) பிரிவு 7 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள்”என்று கூறுகிறது.

இந்த நிலையில், தற்போது  டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடத்தி வருகிறது. டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், பஞ்சாப் ஹரியானா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் தேடல்கள் நடந்து வருகின்றன என தகவல்கள் வெளியாகி உள்ளது.