திருவள்ளூர்

சென்னைக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் இஞ்சின் கோளாறால் நிறுத்தப்பட்டு பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

 

இன்று அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மின்சார ரயில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்தது.  அங்கிருந்து கிளம்பும் போது திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் சென்னைக்குச் செல்ல வேண்டிய புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

இதைப்பற்றிய தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரமாகப் போராடி இன்ஜின் ரிப்பேரை சரி செய்தனர். பிறகு கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாகப் புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து பயணிகள், ”அடிக்கடி சென்னை, திருவள்ளூர் மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் பழுதாகி விடுகிறது. இதற்கு போதிய பராமரிப்பு இல்லாததே காரணம் ஆகும்.  ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின்சார  ரயில்களை முறையாகப் பராமரித்து பயணிகள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளனர்.