சென்னை

சென்னை பரங்கிமலை மற்றும் கிண்டி இடையே ரயில் பாதையில் தீ விவத்து ஏற்பட்டதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் கிண்டி ரயில் நிலையம் வழியாகப் பயணிக்கின்றன.  இன்று பரங்கிமலையிலிருந்து கிண்டி ரயில் நிலையம் செல்லும் ரயில்வே பாதையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்குள்ள ட்ரான்ஸ் பார்மர் ஒன்றின் கீழ் வளர்ந்திருந்த காய்ந்த புற்கள் எரிந்து கொண்டிருந்தது.  எனவே முதலில் டிரான்ஸ்ஃபார்மரில் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்பட்டது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு தாமதமானதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தீயை அணைத்தனர்.  இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டு பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்போது ரயில் சேவை சீராகியுள்ளது. இந்த தீ விபத்துக்குக் காய்ந்திருந்த புற்களை அகற்றாமல், உரிய பராமரிப்பின்றி இருந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது.