சென்னை:

மிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவை தொடங்கும் என்று போக்குவரத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவையில் பஸ்கள் இயக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

தமிழக போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த இயக்குனர்கள் குழு கூட்டம், தற்போதைய போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து போக்குவரத்து துறையை சேர்ந்த இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் போக்குவரத்து துறையை மேம்படுத்துவது, பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் நிர்வாக செலவினங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பேசிய இயக்குனர் ஜெ.ராதாகிருஷ்ணன் (முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர்)  தமிழகத்தில் கடந்த 8 மாதத்தில் ரூ.603 கோடி மதிப்பீட்டில் 2,316 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் முதன் முறையாக மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை இயக்குவதற்கான விரிவான திட்டம் சி-40 என்ற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

12 ஆயிரம் புதிய பி.எஸ்.-4 தரத்திலான பஸ்களையும், 2 ஆயிரம் மின்சார பஸ்களையும் வாங்கி பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி முதற் கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. உயர் அதிகாரிகள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் களைந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.