சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி,  நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலத்தினார்.

அப்போது, அவரை அருகே கண்ட தேர்தல் அலுவலர், அவரது இடது கை ஆள்காட்டி விரலில் மை வைப்பதற்கு பதிலாக வலது கை விரலில் அடையாள மை வைத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர்  சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ இன்று  செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, செய்தியாளர் ஒருவர், ரஜினிகாந்த் வாக்களிக்கும் முன்பு அவரது வலது கை விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இது வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது. வலது கையில் மை வைத்தது தேர்தல் விதிமீறல் இல்லையா? அவரது வாக்கு செல்லுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த  தேர்தல் ஆணையர், தேர்தல் விதிமுறைப்படி வாக்காளர்களுக்கு இடது கையின் ஆட்காட்டி விரலில்தான் அடையாள மை வைக்கப்பட வேண்டும். அதில் வைக்க முடியவில்லை என்றால் (காயம் உள்ளிட்ட காரணங்களால்), நடுவிரலில் வைக்க வேண்டும். ஆனால், வலது கை விரலில் வைக்கக் கூடாது. இது சாதாரண தவறுதான். இருந்தாலும் இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றார்.

ரஜினியை அருகே நேரில்  பார்த்த மகிழ்ச்சியில்  திக்கமுக்காடிய  வாக்குச் சாவடி அலுவலர்.. இடது கைக்கு பதில் வலது கையில் மை வைத்துள்ளதாக தெரிகிறது.