சென்னை; தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை விடுவிக்க மறுக்கும மத்தியஅரசுக்கு எதிராக நாளை மாலை சென்னையில் திமுக மந்நும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி நாளை மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது மாநிலத்தில் சரச்சையை ஏற்படுத்தி உள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்குரிய கல்வி நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்ரவரி 15 அன்று வாரணாசியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (பிப்ரவரி 18) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளன.
இதுதொடர்பாக திமுக மறறும் கூட்டணி கட்சிகள் சார்பில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.
பதவிக்காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட – தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள். தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி – வேலைவாய்ப்பு – சமூகநீதி – வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது.
அது, அரசியல்ரீதியாகப் பாஜக-வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது. வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (பிப்ரவரி 18) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.