தர்மபுரி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாமா என கருத்து கேட்பது இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டும்தான் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளர். மேலும், அதிமுகவை அழிக்க திமுக முயற்சி செய்து வருவதாகவும், அதை நிறைவேறாது என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏராளமான தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒராண்டில் மட்டும் 27 தற்கொலைகள் நடந்துள்ளன. இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என தமிழகமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், தமிழகஅரசு, அதற்கான தடை சட்ட திருத்தத்தை கொண்டு வருவதில் தாமதம் செய்து வருகிறது.

இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுக்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, அங்குள்ள  கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “மக்களின் ஆசியோடு உயர்ந்த பதவியான இடைக்கால செயலாளர் என்ற பொறுப்பை ஏற்றுள்ளேன். ஒருபோதும் அதிமுக கழகத்தை அழிக்க முடியாது. இது வலிமையான இயக்கம்;  வளமான இயக்கம். ஸ்டாலின் அரசு அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுகிற வழக்கின் மூலமாக கட்சியை கெடுக்க  நினைத்தால் திமுக கட்சி இல்லாமல் போய் விடும். அதிமுகவில் இருந்த சில துரோகிகள் திமுகவுடன் கைகோர்த்துள்ளனர்.

தர்மபுரி மாவட்ட மக்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் நீர் ஏற்றும் திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை திமுக செயல் படுத்த முன்வரவில்லை.  மக்களையும், விவசாயிகளையும் இந்த விடியா திமுக அரசு வஞ்சித்து வருகிறது.

தனக்கு வருமானம் , தன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் எண்ணம்.   தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் எளிதில் இந்த ஆட்சியில் கிடைக்கிறது .ஆன்லைன் சூதாட்டத்தை கண்டிப்பாக தமிழகத்தில் ஒழிக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதை விட்டுவிட்டு கருத்து கேட்கக் கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர் . ஆன்லைன் சூதாட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பது என்பது இந்தியாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓராண்டில் 27 தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து திமுகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…