சென்னை: செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பலகோடி மோசடி செய்தது தொடர்பான  வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார்.  சிறையில் உள்ள அவரின் அமைச்சர் பதவியை திமுக அரசு இதுவரை பறிக்காமல் இருந்து வருகிறது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளும், ஊழல்வாதிகளும், மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், உடல்நிலை பாதிப்பு என காரணம் கூறி செந்தில் பாலாஜி தரப்பின் ஜாமின் கோரப்பட்டு வருகிறது. அவரது ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து,  செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை பண்டிகை விடுமுறைகள் முடிந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம்.

கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 46 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல்  உள்ளிட்ட  பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதம் முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து, குற்றப்பத்திரிகையில் உள்ள சில தகவல்களுக்கு மத்திய குற்றப்பிரிவு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்.31க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்களை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.