சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மே 25ந்தேதி) முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் எதிரொலியாக தமிழ் நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் நேரடி ஆய்வு நடத்த  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.

வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது வட்டாட்சியரின் பணி.  இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார். மேலும், வருவாய் துறை என்பது நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும்,   பொது மக்களின் தேவைகளான பல்வேறு வகையான அடிப்படையான சான்றிதழ்கள் வழங்குதல்,  முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்கள் ,ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு ஓய்வு ஊதியம் வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல் ,விபத்து நிவாரணம் வழங்குதல் போன்ற முக்கியமான சேவைகள்  வட்டாட்சியர் அலுவலகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும். ஆனால், பல அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,  பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆட்சியர்கள் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகம் சென்று  தணிக்கை செய்ய வேண்டும் என்று  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று நேரடி தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறை கேட்டறிந்தார். அதில்,  அங்கு பட்டா,  ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் வருவாய்த் துறையின் சேவைகளை பெற வந்திருந்த பொதுமக்கள் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் கூறினார். இதையடுத்து, அம்மைய அதிகாரியை கூப்பிட்டு கண்டித்த முதல்வர், பொதுமக்களின் கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.  பின்னர் வருவாய் வட்டாட்சியர்,  அலுவலக வருகை பதிவேடு இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர்,  வட்டாட்சியரிடம் வருகை தந்துள்ள அலுவலர்கள் பணியாளர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து, பொதுமக்களின் கோரிக்களை உடனுக்குடன் முடித்து கொடுக்கும்படியும் அறிவுறுத்தினார்.