சென்னை: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் என தமிழக சட்டப்பேரவையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றுமுதல் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெறுகிறது.  முதல்நாளான இன்று நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

விவாதங்கள் தொடங்குவதற்கு முன்னதாக, இன்று நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேரவையில் 50 ஆண்டு காலம் இடம்பெற்று அரை  நூற்றாண்டை நிறைவுசெய்யும் அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. சட்டப்பேரவையில் பொன்விழா காணும் அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மாற்று எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “இன்றுமுதல் துறை மானியக் கோரிக்கையை நீர்வளத் துறையின் அமைச்சரான துரைமுருகன் தாக்கல்செய்கிறார். 100 ஆண்டுகால சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக அவையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார் துரைமுருகன். கருணாநிதி, அன்பழகன் மறைந்த பிறகு அவையை நடத்தக்கூடிய முன்னவராக உள்ளார், எனக்கு முன்னோடியாக உள்ளார். வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது என்னை இளைஞராகப் பார்ப்பதாகச் சொல்வார். ஆனால் நான் அவரை அண்ணா, கருணாநிதி இடத்தில் வைத்துப் பார்க்கிறேன்.

கருணாநிதிக்கு வழித்துணையாக இருந்திருக்கிறார். கருணாநிதி துரைமுருகனை, ‘துரை’ என அன்போடு அழைப்பார். அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். அதைப் பார்க்கும்போது எங்களுக்குப் பொறாமையாக இருக்கும். துரைமுருகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்திருந்தபோது அவரை நேரில் சென்று இரவு முழுவதும் இருந்து ஆறுதல் தெரிவித்து வந்தார் கருணாநிதி. எந்தத் துறை கொடுத்தாலும் சிறப்பாகச் செயல்படுபவர். திமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. சட்டப்பேரவையில் பொன்விழா நாயகனுக்கு வாழ்த்துகள்” என்றார்.

முன்னதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.