சென்னை

வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாக்கூட்டத்தில் தாம் மணியம்மையாரைக் குறித்து தவறாகப் பேசவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி அன்று வேலூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடந்தது.  இதில் பல திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அதில் அமைச்சர் துரைமுருகன் தனது உரையில் பெரியாரின் மனைவி மணியம்மையாரைக் குறித்து தவறாகப் பேசியதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்குப் பதிலாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,

“செப.டம்பர்17 அன்று வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில் நான் பேசும்போது, திமுகவுக்கும் ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்துக்கும் இருந்த தொடர்புகளைக் குறித்துப் பேசிக் கொண்டு வரும்போது, திமுக தோன்றியதற்கே காரணம் வேலூர் மாநகரம் தான் காரணம்.

வேலூருக்கு பிரச்சாரத்துக்கு வந்த தந்தை பெரியார் மணியம்மையார் வீட்டில் தங்குவது வழக்கம் என்பார்கள். மணியம்மையாருடைய கட்சிப் பணியைப் பார்த்த பெரியார் கழகப் பணி ஆற்றுவதற்காக உடன் அழைத்துச் சென்றார். எதிர்காலத்தில் கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார் என்கிற வகையில் மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்து கொண்டார். இது பொருந்தா திருமணம் என்று அண்ணா திராவிட கழகத்தில் இருந்து வெளியேறினார். இதுதான் அன்றைய தினம் நான் பேசிய பேச்சின் சாரம்.

இதில் ஒரு தவறு எங்கே நடந்தது என்றால், “தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், “தந்தை பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்” என்று பேசிவிட்டேன். “அழைத்துக் கொண்டு போனார்” என்பதற்கும் “கூட்டிக் கொண்டு போனார்” என்பதற்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

என்னுடைய இந்த பேச்சு தமிழினத் தலைவர், அண்ணன் வீரமணிக்கும், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்காப் பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்குச் செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில் அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக நான் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் இடத்திலும், ஆசிரியர் வீரமணி இடத்திலும் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை அண்ணன் வீரமணியே அறிவார்” 

என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.