‘இன்று கடன்..நாளை ரொக்கம்..’’ அயனாவரத்தில் அதிசயம்..

மாதிரி புகைப்படம்

’’ இன்று ரொக்கம்.. நாளை கடன்’’ என்று கடைகளில் போர்டு தொங்குவதைப் பார்த்துள்ளோம்.

‘’ இன்று கடன் .. நாளை ரொக்கம்’’ என எந்த கடையின் முகப்பிலாவது விளம்பரப் பலகையைப் பார்த்ததுண்டா?

சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் இப்படி ஒரு அதிசய பலகையைக் காண முடிகிறது.

உங்கள் கையில் காசு  இல்லையென்றால் ஆயிரம் ரூபாய் வரைக்கும், இந்த கடையில்  கடனாக மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இதற்காக சர்டிபிகேட் எதுவும் சமர்ப்பிக்கத் தேவை இல்லை.

’ஊரடங்கு முடிந்து கையில் காசு புழங்கும் போது, கடனை திருப்பி தருகிறேன்’’ என்று வாய்மொழியாகச் சொன்னால் போதும்.

 மளிகை சாமான்களோடு, இணைப்பாக புன்சிரிப்பையும் வழங்கி, வாடிக்கையாளர்களைச் சந்தோஷமாக அனுப்பி வைக்கிறார், கடை உரிமையாளர், சரவணன்.

 ’’ ஊரடங்கால் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், உள்ளிட்டோரின் குடும்பம் பசி-பட்டினியால் வாடுவது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே,அவர்களுக்குக் கடனாக மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்தேன் . என்னால் முடிந்த உதவி இது.’’ என்று சொல்கிறார், சரவணன்.

இந்த கடை விளம்பரத்தை உள்ளூர் டி.வி.ஒன்று ‘பிரேக்கிங் நியூஸ்’’ ஆகச் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்த-

சரவணன் மளிகைக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது.

 

– ஏழுமலை வெங்கடேசன்