தம்பியைக் கொல்ல ரேடியோ வெடி.. நிலத்தகராறில் சிறுமியும் பலி

சேலம் பனமரத்துப்பட்டி அருகே தும்பல்பட்டியை சேர்ந்தவர் 60 வயதான விவசாயி மணி.  ஜுன் 17ம் தேதி அன்று வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஒரு ரேடியோ கீழே கிடந்தது.  அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.  அந்த ரேடியோவை யாரும் தேடி வராததால் அதை ஆன் செய்துள்ளார்.  அப்போது அது பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது.  இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது வீட்டிலிருந்த அவரது பேத்தி சவுரதி, அண்ணன் மகன் வசந்தகுமார் மற்றும் உறவினர் நடேசன் உள்ளிட்டோரும் படுகாயமடைந்தனர்.  இதில் 12 வயது சவுரதி அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.  அவளது குடல் வெளியில் சரிந்து விட்டது.  உடனடியாக அனைவரும் சீலநாயக்கன்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இதில் சவுரதிக்கு உள் உறுப்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டது.  இதனால் ஆபரேஷன் செய்யப்பட்டும் பலனின்றி அச்சிறுமி இறந்துவிட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரேடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.  அப்போது தான் நிலத்தகராறு காரணமாக மணியின் அண்ணன் செங்கோடன், தம்பியைக் கொல்ல ரேடியோவில் வெடி வைத்தது தெரிய வந்துள்ளது.  உடனடியாக அவரை கைது செய்த மல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்த தம்பியைப் பழிவாங்க நினைத்து வைத்த வெடியில் சிறுமியும் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

– லெட்சுமி பிரியா