மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிருடன் இருப்பவருக்கு ‘’இறுதிச் சடங்கு’’..

கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்குக் கடந்த ஞாயிறு அன்று தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவர் ,காய்ச்சல் காரணமாக அழைத்து வரப்பட்டார்.

கொரோனா வார்டில் அவரை அனுமதித்து டாக்டர்கள், சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் திருக்கோவிலூரைச் சேர்ந்த பாலர் என்பவரும் அதே வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் பாலர் இறந்து போனார்.

’’சார்ஜ் ஷீட்’’ மாறியதால் கொளஞ்சியப்பன் இறந்து விட்டதாகக் கூறி, அவரது குடும்பத்தாரிடம் பாலர் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர்.

கொளஞ்சியப்பன் உறவினர்கள், பாலரின் சடலத்தைக் கதறி அழுதபடி வாங்கி, தங்கள் ஊருக்கும் கொண்டு சென்றுள்ளனர்.

இறுதிச் சடங்கின் போது தான், சடலத்தின் முகத்தைப் பார்த்துள்ளனர்.

‘’இது கொளஞ்சியப்பன், உடல் இல்லப்பா.. வேறு உடம்பை தந்திருங்காங்க’’என உறவினர்கள், கூச்சல் போட்டுள்ளனர்.

தங்களிடம் தந்த உடலுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது. கொளஞ்சியப்பன் உயிருடன் இருப்பதும், கொரோனா வார்டில் அவர் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது.

உயிருடன் இருப்பவரை ’’பிணமாக்கிய’, இரு டாக்டர்கள் மற்றும் ஐந்து நர்சுகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி.