சென்னை

சென்னையில் விடிய விடியக் கனமழை பெய்து சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதியில் ஆழ்ந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

எனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்தது.

சென்னையில் அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட ல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது, சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.