சென்னை

கடும் மழை காரணமாக இன்று முதல் நடக்க இருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய வாய்மொழித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக் ஆணையம்  (டி என் பி எஸ் சி) கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட துறைத் தேர்வுகள், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழித் தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் 10.11.2021 முதல் 17.11.2021 வரை ஏழு நாட்கள் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய ஏழு மையங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் நாட்களில் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் அதி கன மழை மற்றும் வானிலை நிலைய சிவப்பு எச்சரிக்கை காரணமாகவும், தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு 10.11.2021 முதல் 13.11.2021 ஆகிய நான்கு நாட்களில் மட்டும் நடைபெற இருந்த இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

இந்த நான்கு நாட்களில் நடக்க இருந்த நேர்காணல் தேர்வுகளுக்கான தேதி தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும். ”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.