கோட்டயம்

கேரள மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட காட்சி வீடியோவாக சமூக வலைத் தளங்களில் வெளியாகி உள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகப் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது பெய்த மழையால் இடுக்கி, கோட்டயம்  மாவட்டங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.   இங்கு மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து அடுத்தடுத்து உடல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டது. இந்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு ஆற்றின் விளிம்பில் நிற்கும் இரண்டு மாடி வீடு மெதுவாக சாய்ந்து விழுகிறது. அந்த கட்டடம் அப்படியே சேற்று நீரில் அடித்துச் செல்லப்படுகிறது.  சம்பவம் நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.