டில்லி

கொரோனா பரவுதல் காரணமாக வருமான வரிக் கணக்கு செலுத்தும் இறுதி தேதி செப்டம்பர் 30 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.  கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரக் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது சில விதிகள் தளர்வுடன் ஊரடங்கு தொடர்ந்து வருகிறது.  இந்த வருடத்துக்கான வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி இந்த மாதம் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் கணக்குகளை அளிக்க முடியவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த 2018-19 கணக்காண்டுக்கான வருமான வரிக்கைக்குச் செலுத்தக் கடைசி தேதியை இந்த வருடம் செப்டம்பர் 30 ஆக நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.