சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் தவறான கொள்கைகளே வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றுக்கு காரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநிதே கூறி இருக்கிறார்.

மத்திய அரசின் கொள்கைளை கண்டித்து, இன்று முதல் 15ம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தது.

 

தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநிதே பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம்.

தேவை அதிகரித்தால் மட்டுமே முதலீடுகள் அதிகரிக்கும். அப்போது தான் வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனால், இதற்காக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிஸ்கெட் வாங்குவதற்கு கூட மக்கள், கையில் பணம் இல்லாமல் இருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் வேலை நேரத்தை கூட குறைத்து விட்டன என்றார்.