டில்லி

வெடிகுண்டு மிரடடலால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் சோதனை  நடைபெற்று வருகிறது. 

இன்று மின்னஞ்சல் மூலம் இந்தியாவில் உள்ள அறிவியல் மையங்களின் தலைமையகமாகச் செயல்பட்டு வரும் கொல்கத்தா அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. எனவே நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரே அறிவியல் மையமான நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தற்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது  வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர். மோப்ப நாய்களின் உதவியுடன் நெல்லை அறிவியல் மையம் முழுவதும் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் மாநகர காவல்துறை உதவி ஆய்வாளர் குலசேகரன் தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அறிவியல் மையத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் பார்வையாளர்களின் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.