சென்னை:
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.3,49,38,500 வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ₹ 10,000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும். கடந்த 2 வாரத்தில், சென்னை போக்குவரத்து போலீசார் எடுத்த கடும் நடவடிக்கையில், மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ₹1.69 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

’சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வித்திக்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் மட்டுமே அபராதம் செலுத்தும் நிலையில் பலர் அபராதம் செலுத்துவது இல்லை.

இதனால் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தீர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீஸார் சிறப்பு முகாம் அமைத்து அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3,376 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.3,49,36,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் மட்டுமல்ல, அவர்களின் வீட்டில் உள்ள அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்’’ என அந்த செய்திக் குறிப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.