சென்னை: பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. இது பேருந்து ஒட்டுநர்கள் நடத்துனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

பேருந்தின் படிக்கட்டுகளில்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நடவடிக்கை சென்னை போன்ற நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் அசம்பாவிதங்கள் மட்டுமின்றி பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அதை தட்டிக்கேட்கும் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் மாணவர்களால் தாக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மாணவர்களின் அட்டூழியம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில்,   சென்னையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,   பஸ்சில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும்’ . அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், காவல் நிலையத்தில் அல்லது அவரச காவல் உதவி எண் 100-ஐ நாடலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.